காஃப்கா நுண்மொழி-18
“அந்த கோபுரத்தின் மேல் மனிதர்கள் ஏறாமல் கட்ட முடிந்திருந்தால்,
பேபல் கோபுரம் அனுமதிக்கப்பட்டிருக்கும்”
என் எண்ணம்:
‘பேபல் கோபுரம்’ என்பது விவிலிய கதைகளில் வருகிற ஒரு உருவகம். பெரு வெள்ளத்திற்கு பிறகு பிழைத்த மனிதர்கள் ஷினார்
என்கிற இடத்தில் மிக உயரமான ஒரு கோபுரத்தை கட்டி அதில் தஞ்சம் புகுந்துவிட்டால் இன்னொரு
முறை வெள்ளத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று கட்டுகிறார்கள். அந்த கோபுரத்தின் உயரம் கடவுளின் உலகத்தை தொட்டுவிடுவதற்கான
முயற்சியாகவும் இருக்கிறது. பேபல் என்பதற்கு
கூச்சல் அல்லது இரைச்சல் என்கிற பொருளும் காணப்படுகிறது. அவர்களின் முயற்சியை முறியடிக்க, கடவுள் அவர்களுக்குள்
பல மொழிகளை உருவாக்குகிறார். ஒருவருக்கொருவர்
பேச முடியாமல் போவதால், அக்கோபுர கட்டுமானம் நின்று போகிறது. மனிதனது செயலுக்கு இது
கடவுள் அளித்த தட்டணை என்று பார்க்கப்படுகிற இக்கதை, பின்னாளில் இது பல நாகரீகங்கள்
உருவாக காரணமாக இருந்ததாகவும் பேசப்பட்டது.
மேலே ஏறாமல் கட்டப்பட்டிருந்தால், அக்கோபுரம் அனுமதிக்கப்பட்டிருக்கும்
என்கிறார் காஃப்கா. அது எப்படி?
நுண்மொழி 15-ல் சருகுகளால் மூடப்படும் பாதை பற்றி பேசும்
போது, முழுப் பாதையையும் தேடாமல், சுத்தம் செய்யப்பட்ட பாதையை கடந்து, மேலும் சுத்தம்
செய்து, மேலும் பயணம் தொடர வேண்டும் என்பதை அறிவுறுத்தினார்.
இவர்கள் மேலேறி கூச்சல் குழப்பம் ஏற்படுத்தியதால் கடவுள்
அக்கோபுரக் கட்டுமானத்தை நிறுத்தினார். மேலே
ஏறாமல் எப்படிக் கட்டுவது என்பது சிந்தனைக்குரியது. வேறு ஏதோ வழியிருப்பதாய் காஃப்கா சொல்கிறார்.
கருத்துகள்
கருத்துரையிடுக