காஃப்கா நுண்மொழி-13
காஃப்கா நுண்மொழி-13
“புரிதலின் முதல் மெல்லிய ஒளிக்கீற்று மரணத்திற்கான அவாவாக இருக்கிறது. இவ்வாழ்க்கையே தாங்க வொண்ணாததாகவும் மறுவாழ்க்கை
அடைய முடியாததாகவும் இருக்கிறது. மரணத்திற்கான
காத்திருத்தல் வெட்கப்பட வேண்டியதில்லை என்று உணர்கிறான். வெறுப்படைந்துவிட்ட பழைய கூண்டிலிருந்து, காலத்தால்
மீண்டும் வெறுக்கத்தக்கதாய் மாறிவிடக் கூடிய புதிய கூண்டிற்குச் செல்வதற்கு விண்ணப்பிக்கிறான். இந்தக் கைதியை அழைத்துச் செல்லும் பாதையில் எதிரே
வரும் எஜமானன், ‘இந்தக் கைதியை மீண்டும் சிறையில் அடைக்காதீர்கள், இவன் என்னுடன் வரத்தக்கவன்’
என்று கூறுவதற்கான கடைசிக்கீற்று நம்பிக்கையும் இருக்கத்தான் செய்கிறது.”
மிக எளிதாய் புரிந்து கொள்ளக்கூடிய நுண்மொழி இது. இம்மை, மறுமை, மரணம், கடவுள், சொர்க்கம் என்கிற
மீண்டும் மீண்டும் நாம் கேள்விப்பட்டிருக்கிற விஷயங்கள்தான். அடைய முடியாத புதிய வீடுகூட நாளடைவில் வெறுக்கத்
தக்கதாகவே இருக்கும் என்கிறார் காஃப்கா. புதிய
வீட்டிற்குச் செல்ல விண்ணப்பிக்கிற ஒருவன், ஏன் ‘விடுதலை’ குறித்தோ ‘முக்தி’ குறித்தோ
விண்ணப்பிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.
ஏனென்றால், இங்கே ‘முக்தி’ அடைதல் என்கிற கருத்துரு இருக்கிறது.
பிறகு, இன்றைய காலகட்டத்தில், ‘இன்று’ இந்த வாழ்வை கொண்டாடுதல்
என்கிற கருத்துரு பெருவாரியாக பரவியிருக்கிறது என்றே பார்க்கிறேன். எனவே, மறுமை குறித்த அக்கறையும், சொர்க்கம் குறித்த
கற்பனைகளும் முக்கியத்துவம் இழந்து வருகின்றன என்பது என் எண்ணம்.
‘ஏலி ஏலி லாமா சபக்தானி’ என்கிற பைபிள் வசனம் நினைவிற்கு
வருவதை தவிர்க்க முடியவில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக