காஃப்கா நுண்மொழி-35
காஃப்கா நுண்மொழி-35
“பேறு என்றெதுவும்
இல்லை, ‘இருத்தல்’ மட்டுமே. கடைசி மூச்சிற்கும்,
மூச்சு திணறலுக்கும் ஏங்கும் ‘இருத்தல்’ மட்டுமே.”
என் எண்ணம்:
மனிதன் வாழ்நாள் முழுவதும், பொருள் வளத்தை மேம்படுத்திக்
கொள்ளவும், அதனால் பல விஷயங்களை தனது ‘உடைமை’ யாக்கிக் கொள்ளவும் பெருமுயற்சி எடுக்கிறான். செல்வப் பேறு மட்டும் அல்ல, நல்ல பெயர், புகழ்ச்சி,
புண்ணியம், சுற்றம் என்று எல்லாவற்றிற்கும் போராடுகிறான். ஆனால் ஒரு கட்டத்தில், உடல் நலமற்றுப் போய், உடலுடன்
போராடி, உயிருடன் போராடி சிரமம் தாங்காமல் எப்போது மரணம் தழுவும் என்று ஏங்கும் போது,
‘பேறு’ என்று எதுவும் இல்லை, இருத்தல் மட்டுமே தொடர்கிறது. அப்போதைய ஏக்கம், கடைசி மூச்சிற்கானதாகவும், மூச்சுத்
திணறலுக்கானதாகவும் இருக்கிறது.
முந்தைய நுண்மொழியில் எடுத்துரைத்த ‘அயர்ச்சி’யை
தொடர்ந்து காஃப்கா இருத்தல் குறித்து பேசுகிறார். அந்த அயர்ச்சியின் விளைவாக ஏற்பட்ட
விரக்தியில் இந்த நுண்மொழி தோன்றியிருக்கலாம். ‘இருத்தலின்’ நோக்கம் ‘இல்லாமல் போவது’
என்று நேரிடையாக புரிந்தாலும், கடைசி மூச்சிற்கான ஏக்கம் என்பது, கடைசி மூச்சுவரை
‘இருத்தலி’ன் மேலான ஏக்கம் என்றும் பொருள் கொள்ளலாம்.
பிறவிப் பயன் என்கிற வாழ்க்கைப் பேறு கூட இல்லை,
வெறுமனே ‘இருத்தல்’ என்று காஃப்கா சொல்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக